டிவிட்டர் கணக்கிலிருந்து பிரதமர் மோடியை கழற்றிவிட்டது ஏன்? வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ‘பாலோ’ (பின் தொடர்தல்) செய்து வந்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென அவற்றை ‘அன்பாலோ’ செய்தது. இது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை வெள்ளை மாளிகை கழற்றிவிட்டது ஏன் என பலர் பரபரப்பாக பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருகிறது.

கூடுதலாக அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது, சில டிவீட்களை மறுடிவீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பின்தொடரப்படுவார்கள். பிறகு அன் பாலோ செய்யப்படும்’’ என்றார். அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதுதான், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஆகியோரின் டிவிட்டர் கணக்கை வெள்ளை மாளிகை பின்தொடர ஆரம்பித்தது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் புதிய பரிமாணம் என்றெல்லாம் நிபுணர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: