திருமலை: ஐதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு சொந்தமான பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், பால் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உப்பல் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கடந்த 25ம் தேதி தொழிற்சாலைக்கு வந்தனர். அப்போது, தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ராம்ந்தப்பூரை சேர்ந்த செக்யூரிட்டி ஒருவரின் தந்தைக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் 21ம் தேதியில் இருந்தே பணிக்கு வரவில்லை. ஆனாலும் அவருடன் பணிபுரிந்து வந்த 7 செக்யூரிட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர்.