சங்கரன்கோவில்: ஊரடங்கால் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி தொழில்கள் முடங்கியதால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், சுப்புலாபுரம், புளியங்குடி, ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு சேலை, கைலி, துண்டு, டர்க்கி டவல் உள்ளிட்ட துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. விசைத்தறி தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், விசைத்தறியோடு தொடர்புடைய பாவு போடுதல், சாயம் போடுதல், உள்ளிட்ட பணிகளில் உள்ளவர்கள் சேர்த்து சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமலிருக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழில் அடியோடு முடங்கிப் போனது. ஏற்கெனவே உற்பத்தி செய்து வைத்திருந்த பொருட்களை அனுப்ப முடியாமல் விசைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 38 நாட்களாக விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வீதம் 38 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.