மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஊரடங்கு பற்றி மத்திய அரசு முரண்பாடான தகவல்

கொல்கத்தா: ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு முரண்பாடான தகவல்களை வெளியிடுகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடைகளை திறக்க அனுமதித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை குற்றம்சாட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது: மாநில முதல்வர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதில் மேற்கு வங்கத்துக்கு மத்திய குழுவை ஆய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட கேள்விகளை கேட்க தயாராக இருந்தேன். ஆனால் சுழற்சி முறையை காரணம் காட்டி பல்வேறு மாநில முதல்வர்களை மோடியுடன் பேச அனுமதிக்கவில்லை.

ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு முரண்பாடான தகவலை வெளியிட்டு வருகிறது. நாங்கள் ஊரடங்குக்கு ஆதரவாக உள்ளோம். ஆனால் மத்திய அரசு ஒருபுறம் ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தும் நிலையில், மறுபுறம் கடைகளை திறக்க உத்தரவிடுவது ஏன்? கடைகள் திறக்கப்பட்டால் எப்படி ஊரடங்கை தீவிரமாக செயல்படுத்த முடியும், இது தொடர்பாக மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: