சுவாமியார்மடம் அருகே விவசாய பணியின் போது சுவாமி சிலைகள், கல்தூண்கள் மீட்பு

சுவாமியார்மடம்:  சுவாமியார்மடத்தை  அடுத்த வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் நீர்விளாகம் ஊர் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி ேகாயில் அருகே தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது.  இந்த இடத்தில் மரவள்ளி கிழங்கு நடவு செய்வதற்காக தோண்டி உள்ளனர். அப்போது  ஒரு நந்தி சிலை, பிள்ளையார் சிலை மற்றும் சில கல்தூண்கள் கிடைத்தன. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த வாழ்வச்சகோஷ்டம் கிராம  நிர்வாக அலுவலர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது  அந்த பகுதி மருதூர்க்குறிச்சி வருவாய் கிராமத்துக்கு உட்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து அந்த விஏஓவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் விக்ரகங்களை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த  இடத்தில் முற்காலத்தில் கோயில்  இருந்துள்ளது. இங்கு பல சிலைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும், அவற்றை சிலர் கடத்தி சென்றதாகவும், எனவே முழுமையாக  அகழ்வாராய்ச்சி செய்து கோயிலை மீட்க ேவண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: