திருவனந்தபுரம்: இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் முதன் முறையாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதுவரை கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைத்து தரப்பினரும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையே, கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மாதம் 6 நாள் வீதம் 5 மாதங்களுக்கு ஊதித்தை பிடித்தம் செய்யப்படும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளம் அவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி தேவைப்படுவதால் சம்பளம் பிடித்தம் செய்வதாக கேரள அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், அரசு ஊழியர்கள் ஊதியம் பிடித்தம் தொடர்பாக பேட்டியளித்த கேரள மாநில நிதியமைச்சர் ஐசக், கேரளாவில்அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்வதில் அரசு உறுதியாகவுள்ளது. ஊதியம் பிடித்தம் என்ற முடிவை மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.