ஊட்டி ரோஜா பூங்கா 25வது ஆண்டு கண்காட்சி: ஊரடங்கு விலக்கப்பட்டால் நடைபெற வாய்ப்பு

ஊட்டி: ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டியெடுக்கும். இச்சமயங்களில் குளு குளு சீசனை அனுபவிக்க நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விப்பதற்காக ஊட்டியில் பல்வேறு கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து கண்காட்சிகள், போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி ரோஜா பூங்காவில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ரோஜா கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டிருந்தது. ரோஜா பூங்காவிற்கு 25வது ஆண்டு துவக்கம் என்பதால் ரோஜா கண்காட்சியை மூன்று நாட்கள் நடத்த தோட்டக்கலைத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. பூங்காவிலுள்ள அனைத்து செடிகளிலும் தற்போது மலர்கள் பூத்துள்ளது. குறிப்பாக 4000 ஆயிரம் செடிகளில் 400 வகையான ரோஜா மலர்கள் பூத்துள்ளன. ஆனால், ஊரடங்கு காரணமாக தற்போது சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த அழகை காண யாருக்கும் வாய்ப்பில்லாமல் போனது. மே 3ம் தேதிக்கு மேல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டால், ரோஜா கண்காட்சி நடைபெறும், பயணிகள் பார்வையிட வாய்ப்புள்ளது.

Related Stories: