பாங்காக்: ‘ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இது சரியான நேரமல்ல. இதனால், கொரோனா பாதிப்புகள் அதிகமாகும்,’ என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலுக்கு பின்னரும், அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சீரமைக்கவும், புதுப்பிக்கவும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதனால், போயிங் உள்ளிட்ட கனரக உற்பத்தி தொழிற்சாலைகள் அமெரிக்காவில் செயல்பட தொடங்கி உள்ளன. பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றால் ஏற்படும் சிக்கலை சரிக்கட்ட சில நாடுகளின் தலைவர்கள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றனர்.ஆஸ்திரேலியாவில், மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருப்பதால், அடுத்த வாரம் முதல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.