ராமேஸ்வரம்: பாம்பன் கடற்கரையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூடினாலோ, மீன் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மீனவர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரித்தனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 13ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்புகின்றனர். நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று காலை பாம்பன் வடக்கு கடற்கரைக்கு திரும்பினர். பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் பாம்பன் வடக்கு கடற்கரையில் நூற்றுக்கணக்கில் திரண்டனர். இவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் படகில் மீன்களுடன் திரும்பிய மீனவர்களும் படகில் இருந்து இறங்கி, மீன்களை பிரித்தெடுத்து வலையை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் காலை 7 மணிக்குள் மீன்களை விற்றுவிட வேண்டும் என்ற மீன்வளத்துறையின் நிபந்தனையும் மீறப்பட்டு 10 மணி வரை, கடற்கரையில் மீன் விற்பனை நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.