சோமனூர்: தமிழகம் உள்ளிட்ட 4 மாநில வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கோவை அருகே உள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் தங்கியிருக்கும் 4 ஆயிரம் வவ்வால்களினால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள 5 மரங்களில் ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி வாழ்ந்து வருகின்றன. இங்கு தங்கியிருக்கும் வவ்வால்கள் இரவில் இரை தேடி ஊட்டி, குன்னூர், சத்தியமங்கலம் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு பகல் நேரத்தில் மீண்டும் கிட்டாம்பாளையம் திரும்பி விடுகின்றன.இவற்றை ஊர்மக்கள் தங்களுடைய செல்ல பிள்ளைகள்போல பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களின் தொண்டையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்ததையடுத்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.