மேலூர்: மேலூர் அருகே கொரோனா பயத்தால் தங்கள் கிராமத்திற்குள் வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலூர் நகர் மற்றும் புறநகர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலூர் நகரில் அத்தியாவசிய பொருட்கள் கடை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலூர் அருகே நாவினிப்பட்டி ஊராட்சியும் வைரஸ் பாதித்த பகுதியில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த ஊராட்சிக்குட்பட்ட கூத்தப்பன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று ஒன்றிணைந்து தங்கள் ஊருக்குள் நுழையும் எல்கையில் முட்செடிகளை வெட்டி போட்டு அடைத்தனர். இத்துடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளியூர் ஆட்கள் ஊருக்குள் வர அனுமதி இல்லை என்றும் எச்சரிக்கை வாசகமும் எழுதப்பட்டுள்ளது.