நாகை: நாகையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் தூய்மை பணியாளர்களை நாகை நகராட்சி வாகனங்களில் ஏற்றிச்செல்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் நுழையாமல் இருக்க குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாகை நகராட்சி சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் தூய்மை பணியாளர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்வதால் அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகமே இப்படி அலட்சிய போக்கை கடைபிடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.