லண்டன்: கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு தற்போது லண்டன் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இது, அந்நாட்டின் பொது சுகாதாரத்துறைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வேனில் டிரைவர்கள் எடுத்துச்செல்லும்போது ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைகளில் அவர்களுக்கு இதுவரை பிளாஸ்டிக் பிணப் பைகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் உடலை மூட்டைபோல் எளிதில் கட்டி விடலாம். இந்த பைகளுக்கு தற்போது இங்கிலாந்து முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, உடலை மூடி எடுத்துச்செல்ல வசதியாக 2 பிளாஸ்டிக் படுக்கை விரிப்புகளை கொடுத்து வந்தனர். தற்போது இது ஒன்றாக குறைக்கப்பட்டு விட்டது. இது ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் உடலை சுமக்கும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், தங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ? என்ற அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.