சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜ மீனவர் அணி வரவேற்பு தெரிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 22ம் தேதி ஒருநாள் சுய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 22ம் தேதி முதல் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், அத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.