தாராபுரம்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கடந்த 15 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபோதைக்கு அடிமையான குடிமகன்கள் போதைப்பொருட்களை தேடி அலைந்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சிலர் ஆள் நடமாட்டமில்லாத ஆற்றங்கரை பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒதுக்குப்புறமான கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.