பெரம்பூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் ஆரம்பம் முதலே சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்காக குவிய தொடங்கினர். பின்னர் வீடுகளுக்குச் சென்று நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வீடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை 7 மணி முதலே 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை முன்பு குவியத்தொடங்கினர்.