பாபநாசம்: ஊரடங்கு நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் வசதிக்காக பாபநாசத்தில் ஆள் இல்லாத பேக்கரியை அதன் உரிமையாளர் திறந்து உள்ளார். இங்கு பணத்தை பெட்டியில் போட்டு விட்டு பொருட்களை எடுத்து செல்லலாம்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவனை எதிரில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக தனது வாடிக்கையாளர்கள், பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படக் கூடாது என்ற உணர்வு உரிமையாளர் சீனிவாசனுக்கு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பேக்கரி வாசலில் ஆளில்லா கடையை திறந்து வைத்தார். பிரட், ரஸ்க் உள்ளிட்டவற்றை வைத்து விட்டு, அருகில் பணப் பெட்டியையும் வைத்து விட்டார்.