மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல்: 19 பேர் உயிரிழப்பு, 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

மெக்சிகோ: மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் 19 பேர் பலியான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மெக்சிகோவில்தான் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் அங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதிக்கொள்கின்றன. இதுபோன்ற மோதல்களில் ஏராளமானவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிஹூவாஹூவா மாகாணத்தில் 2 போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இருதரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக காட்சி அளித்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் இரு கும்பலை சேர்ந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். மோதல் நடந்த இடத்தில் 19 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: