திருவள்ளூர்: டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பத்தியால்பேட்டை பகுதியை சுற்றி 3 கி.மீ., தூரம் பொதுமக்கள் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதனையடுத்து, பத்தியால்பேட்டை பகுதியை சுற்றி 3 கி.மீட்டர் தூரம் உள்ள அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நடமாட்டத்தை முற்றிலும் குறைத்து, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.