வாஷிங்டன்: அமெரிக்காவில் உடல் பருமனால் பாதிப்பு அதிகமாகி வரும்நிலையில், ‘இறக்கும் தாயிடம் விடைபெற சக்கர நாற்காலியில் வரும் மகள்’ என்று கொரோனா குறித்து கவிதை நடையில் நர்ஸ் ஒருவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்காவின் தற்போதைய தொற்றுநோய் நிலைமை மோசமாகி வருகிறது. அமெரிக்காவின் சியாட்டல், நியூ ஆர்லியன்ஸ், லூசியானா போன்ற நகரங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. லூசியானா மாநிலத்தில், நாட்டின் மொத்த இறப்புகளில் 40 சதவீதம் பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பில் 25 சதவீதம் பேர் உடல் பருமன், 23 சதவீதம் பேர் சிறுநீரக நோய், 21 சதவீதம் பேர் இதய நோய் காரணமாக கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.
மொத்த கொரோனா நோயாளிகளில் 78 சதவீதம் பேர் நீரிழிவு நோய், இதய நோய், சுவாச நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துடன் ஒப்பிடும்போது, ஆர்லியன்ஸ் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏழு மடங்குக்கு அதிகமான இறப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் ஏற்கனவே ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. உடல் பருமன் தொடர்பான பிற நோய்களும் இந்த மரணங்களுக்கு காரணம் என்று முன்னாள் சுகாதார செயலாளர் ரெபேக்கா ஜியா தெரிவித்துள்ளார்.
லூசியானாவின் ஆக்ஸ்னர் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நர்சிங் அதிகாரி ட்ரேசி மோட்டாப் கூறுகையில், ‘இறக்கும் தாயிடம் விடைபெற சக்கர நாற்காலியில் வரும் மகள்’ என்று கவிதை நடையில் கூறினார். மேலும், அவர் கூறுகையில், ‘இருவரும் உடல் பருமனுடன் போராடி வந்தனர். ஐ.சி.யு-வில் தாய் முதலில் கொரோனா பாதிப்பால் இறந்தார். தற்போது மகள் சக்கர நாற்காலியில் வந்து தனிமைமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சையில் உள்ளார்’ என்றார்.