சேலம்: தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் உறவினர்களை சந்திக்க முடியாத நிலையில் வாட்ஸ்அப் வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்த்து பேச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சிறைகள் உள்பட 138 சிறையிலும் உடனடியாக இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் சுமார் 1000 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகள் குடும்பத்தினரை சந்திக்காததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ? என அவர்கள் அச்சத்திற்கு ஆளாகினர். இதையடுத்து கைதிகள் அவர்களின் குடும்பத்தினருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேசும் வசதியை சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.