சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று முன்தினம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘’உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய, மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.