பெய்ஜிங் : சீனாவில் கடந்த 5 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் வுகான் நகரில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளும் லாக்-டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், சீனாவின் கொரோனா மையமான ஹூபேய் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆரோக்கியமானவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இல்லை. மாறாக அயல்நாட்டிலிருந்து சீனா திரும்பிய சீன நாட்டவர்கள் 473 பேருக்கு பாதிப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.