புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் லிட்டருக்கு தலா ₹8 உயர்த்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி சட்ட திருத்த மசோதா, நேற்று மக்களவையில் நிறைவேறியது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 30 டாலருக்கு கீழ் இறங்கியுள்ளது. இதற்கேற்ப விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஆனால், கடந்த 14ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதில் கலால் வரி 2 ரூபாய் மற்றும் சாலை வரி 1 ரூபாய் அடங்கும். இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 39,000 கோடி வருவாய் கிடைக்கும்.