பீஜிங்: கொரோனா வைரசை எப்படி கட்டுப்படுத்தினோம் என்பது பற்றி இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தங்களுக்கு உதவிய 19 நாடுகளுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால் அந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறிய போது, இந்தியா-சீனா இடையே தடையற்ற உறவு நீடிக்கிறது. கொரோனா பாதிப்பின் போது பிரதமர் மோடி தொடர்ந்து தொடர்பில் இருந்து ஒத்துழைத்தார். அதன் பின்னர், ஆயிரக்கணக்கான சீனர்கள் இறந்தபோதும் இரங்கல் தெரிவித்து சீனாவுக்கு கடிதம் எழுதினார். கொரோனா தாக்கத்தின் போது இந்தியா அளித்த உதவியை சீனா பாராட்டுகிறது.