சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமையன்று, கொவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டு அறிவதற்காக, ஆய்வகங்கள் பயன்படுத்த வேண்டிய கருவிகளின் தரம் குறித்த வரையறை ஒன்றை அறிவித்து இருக்கிறது. அதன்படி, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் அல்லது ஐரோப்பிய தரச் சான்று பெற்ற கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இன்றைய நெருக்கடியான சூழலில், அரசு வலியுறுத்துவது போல, அமெரிக்கா, ஐரோப்பியத் தரச்சான்றிதழை எப்படிப் பெற முடியும்?. மத்திய அரசின் அறிவிப்பின்படி, புனேயில் இயங்கி வருகின்ற இந்திய அரசின் நுண்ம நச்சு ஆய்வு நிறுவனம் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.