வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு; மாஜி பேட்ஸ்மேன் சஸ்பெண்ட்: பரோடா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை

பரோடா: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அதுல் பெடடே (53), பரோடா மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். கடந்த மாதம் இமாச்சல பிரதேசத்தில் நடந்த ஒரு போட்டியின் போது வீராங்கனை ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். சில மூத்த வீரர்கள் இதுதொடர்பாக பரோடா கிரிக்கெட் சங்கத்திடம் (பிசிஏ) புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அதுல் பெடடே மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட வீராங்கனையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானதால் பரோடா மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் என்ற பதவியில் இருந்து அதுல் பெடரே இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து, பி.சி.ஏ செயலாளர் அஜித் லெலே கூறுகையில், ‘ஆம், பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாரை விசாரித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.சி.ஏ-க்கு வெளியில் இருந்து ஒரு நடுநிலை உறுப்பினரைக் கொண்ட விசாரணைக் குழு அளித்த முதற்கட்ட அறிக்கையின்படி சஸ்பெண்ட் ெசய்யப்பட்டுள்ளார். இருந்தும், விசாரணை நிலுவையில் உள்ளது” என்றார். சஸ்பெண்ட் ஆன அதுல் பெடடே 1994ம் ஆண்டு வாக்கில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பரோடா ஆண்கள் அணியின் பயிற்சியாளராகவும், கடந்த ஆண்டு பெண்கள் அணிக்கு பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: