நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டைகள் தேங்கி அழுகுவதை தடுக்க, பண்ணையாளர்கள் ரூ.1க்கு முட்டை விற்பனை செய்கின்றனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக, நாடு முழுவதும் முட்டை, கறிக்கோழி சாப்பிட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் நாமக்கல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முட்டைக்கோழி, கறிக்கோழி பண்ணைத்தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கோழிபண்ணைகளில் முட்டை விலை குறைந்தும் விற்பனை அதிகரிக்கவில்லை. கேரளா, கர்நாடகாவில் கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளதால், அம்மாநிலத்திலும் முட்டை விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் முட்டையின் தேக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேக்கத்தை குறைக்க பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.1க்கு விற்பனை என புதிய பார்முலாவை பண்ணையாளர்கள் கையில் எடுத்துள்ளனர். கோடைக்காலம் என்பதால் பண்ணைகளில் ஒரு வாரத்துக்கு மேல் முட்டை இருப்பு இருந்தால், அழுக தொடங்கி விடும். இதனால் பெரும்பாலான பண்ணைகளில் ரூ.1க்கு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.