புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி வரை புதிய வரிகள் விதிக்கக் கூடாது, வங்கி கடன்களை வசூலிக்க கூடாது’ என கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு மக்களுக்கு அரசு அதிகாரிகள் வரி விதிப்பது, வங்கி கடன் வசூலிப்பது ஆகியவற்றை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 6ம் தேதி வரை வரி, வங்கி கடன் வசூலிப்பு கூடாது என உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கன்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.