புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இவர்கள், சட்ட விதிகளை பயன்படுத்தி நீதிமன்றத்திலும், ஜனாதிபதிக்கும் மாறி, மாறி மனு அனுப்பி வந்த நிலையில், தற்போது அனைத்தும் முடிவடைந்து நாளை மறுநாள் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தான். மனுவில், ‘குற்றம் நடந்தபோது தான் ராஜஸ்தானில் இருந்தேன். என்னை போலீசார் டிசம்பர் 17ம் தேதி கைது செய்தனர். நான் 16ம் தேதி டெல்லியில் இல்லை’ என கூறியுள்ளார். இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.