மதுரை: மதுரை மாவட்ட திமுக முன்னாள் செயலாளராகவும், தற்போது மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராகவும் இருப்பவர் வேலுசாமி (71). முன்னாள் எம்எல்ஏ. இவர், மதுரை அண்ணாநகரிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு, மனைவி ராஜாத்தி, மருமகன் டாக்டர் சுரேஷ் ஆகியோருடன் வீட்டில் இருந்தார். வீட்டின் கதவு, காம்பவுண்டு சுவரிலுள்ள 7 அடி உயர இரும்பு கேட்டும் பூட்டி இருந்தது. அப்போது திடீரென்று பயங்கர அதிர்வுடன் வெடி சத்தம் கேட்டது. உடனே வேலுசாமியும், அவரது மனைவியும் வெளியே வந்து பார்த்தபோது, காம்பவுண்டுக்குள் கரும்புகை வந்தது. வெடிகுண்டு வீசப்பட்டு வெடித்து இருப்பதை உணர்ந்தனர். அண்ணாநகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை கமிஷனர் கார்த்திக் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர்.