விழுப்புரம்: கடந்த 2013ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட 362 பேர் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கினை ரத்து செய்து விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி:
காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமகவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், இருவரும் விபத்து காரணமாக உயிரிழந்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை முதற்கட்ட வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக, காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. இதற்கு விழுப்புரம் காவல்துறை அனுமதி தர மறுத்தது. இதனை தொடர்ந்து தடையை மீறி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய இரவு ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறை சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இன்றைக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீது காவல்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் காலதாமதமாக ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது. குற்ற முறையீடு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பது நீதிமன்றத்தின் தகவலாக உள்ளது. தொடர்ந்து, 473 பிரிவின் கீழ், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் குற்ற முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும். அதனை செய்ய காவல்துறை தவறிவிட்டதாகவும் கூறி இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று காரணங்களை அடிப்படையாக கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரின் மீது தொடரப்பட்ட வழக்கை தற்போது விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.