புதுடெல்லி: கொரோனா தடுப்பு சோதனைகளுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட விமான பயணிகளிடம் இருந்து கொரோனா வரி வசூலிக்க தனியார் பராமரிப்பு விமான நிலையங்கள் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா வைரஸ் பீதி உலகமெங்கும் பரவி உள்ளது. வரைஸ் தாக்குதல் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 21 விமான நிலையங்களில் கொரோனா சோதனைகள் நடைபெற்று வருகிறது. விமானத்தில் வரும் பயணிகளின் உடல் சூட்டை கண்டறிய தெர்மல் ஸ்கேனர்கள் கருவிகள் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான கட்டணமும் கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கிடையே, பயணிகளிடம் கொரோனா சோதனை வரி வசூலிக்க தனியார் நிர்வகிக்கும் விமானநிலையங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி பராமரிப்பு விமான நிலையங்கள் தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விமான நிலையங்களில்தான் கொரானா வரி வசூலிக்கப்பட உள்ளது.