அயோத்தியா: அடுத்த மாதம் ராமநவமி விழா கொண்டாடும்போது, ராமஜென்மபூமியில் பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம் என பூசாரி சதேந்திரதாஸ் கூறியுள்ளார். அயோத்தியில் தற்போது ராமர் கோயில், தற்காலிக இடத்தில் உள்ளது. இங்கு முக்கிய பூசாரி சதேந்திரதாஸ் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் மட்டுமே தினந்தோறும் பூஜை செய்து வந்தனர். இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் முதல் முறையாக ராம நவமி விழா அடுத்த மாதம் 2ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை சிறப்பாக நடந்த உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ராமர் கோயில் பூசாரி சதேந்திரதாஸ் கூறியதாவது:இந்தாண்டு ராமநவமி விழாவில், பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு ஆரத்தியை பார்வையிடலாம். இதற்காக ராமர் கோயிலில் உள்ள ராமர், லட்சுமண், பரதன், சத்ருகன் ஆகியோரது சிலைகள் தற்போதுள்ள தற்காலிக கர்ப்பக்கிரக இடத்திலிருந்து 250 முதல் 300 மீட்டர் தூரம் வரை உள்ள புதிய இடத்துக்கு குண்டுகள் துளைக்காத கூண்டில் வைத்து வரும் 25ம் தேதி காலை கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விழாவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோயில் சிலைகள் கொண்டு செல்லப்படும்.