ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் நேற்று 2வது பட்டமளிப்பு விழா நடந்தது. இங்கு மருத்துவ படிப்பை முடித்த 248 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் டாக்டர்களின் சேவை மிக முக்கியம். தன்னையும் தாண்டி, அடுத்தவர் நலன் பற்றி சிந்திப்பதுதான் உண்மையான அறிவின் பலம் என விவேகானந்தர் கூறியுள்ளார். இதுதான், மருத்துவத்துறையின் உண்மையான இலக்கு.
மோடி ஆட்சியில் நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. 157 புதிய மருத்துவ கல்லூரிகளை அவர் திறந்துள்ளார். 29 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 17 ஆயிரம் முதுநிலை பட்டப்படிப்பு இடங்களை அவர் கடந்த 6 ஆண்டுகளில் உருவாக்கி இருக்கிறார். அதிக டாக்டர்களை உருவாக்குவதற்காகவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு டாக்டர்கள் இருப்பார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு ₹5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம்.இவ்வாறு அவர் பேசினார்.