அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் போட்டி: ஏற்கனவே ஒரு முன்மாதிரி உள்ளது...ஐபிஎல் நடத்த கவாஸ்கர் விருப்பம்

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் பீதியால் வருகிற 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.  இதற்கிடையே கொரோனோ காரணமாக மத்திய அரசு  வெளிநாட்டினருக்கு இந்தியா வர வழங்கப்பட்ட விசா  ஏப். 15ம் தேதி வரை ரத்து செய்தது. அதனால்  ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஐபிஎல் தொடர் ஏப். 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்காக மத்திய அரசின் சுகாதாரம், விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பிசிசிஐ  செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், பிப்ரவரி 1999ல் நடந்த ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை ஏற்கனவே ரசிகர்கள் இல்லாத வெற்று அரங்கில் விளையாடி உள்ளதால், மூடிய கதவுகளுக்கு பின்னால் ஐபிஎல் போட்டி நடத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘1999ல் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில், சச்சின் ரன் அவுட் ஆனதும் அரங்கில் இருந்த ரசிகர்கள் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டு பிரச்னை எழுந்தது. கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் இச்சம்பவம் நடந்ததால், அன்றைய போட்டி நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் வெற்று அரங்கில் போட்டி நடத்தி உள்ளோம். எனவே இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே ஒரு முன்மாதிரி உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டியை நடத்தலாம்’ என்றார்.

Related Stories: