புதுடெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விவரமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கொரோனா வைரஸ் பரவிவருவதன் எதிரொலியாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதுகுறித்து மவுனம் காத்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2,700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. பேரல் 35 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் நாட்டில் பெட்ரோல் விலையானது தொடர்ந்து ரூ.70ஆக நீடித்து வருகின்றது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2004ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 35அமெரிக்க டாலராக குறைந்தபோது நாட்டில் பெட்ரோல் விலையானது ரூ.37.84ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல் விலையானது ரூ.70ஆக நீடித்து வருகின்றது.