மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: தமிழகம் முழுவதும் விரைவாக வழங்குவதற்கு 100 புதிய மருத்துவர்கள் நியமனம்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.விரயத்தைக் குறைக்கவும், மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

ஆனால், தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணி மந்தமாக நடந்து வந்தது. இப்பணிகளை விரைவுபடுத்த கடந்த ஜனவரி மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், அடையாள அட்டையைப் பெற 2 லட்சம் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்தனர். அனைவருடைய விண்ணப்பமும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறன் சதவீதம், எந்த வகையான மாற்றுத் திறனாளி போன்றவை விண்ணப்பத்தில் சரியாக உள்ளதா என்பதைக் கண்டறிந்து தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க சுகாதாரத் துறையின் உதவியுடன் தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்களை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை நியமனம் செய்துள்ளது.

Related Stories: