வேளச்சேரி: சேலையூர் அருகே காரில் இருந்து சுமார் 1.5 டன் கொண்ட 16 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்த காமராஜபுரம், மசூதி காலனி அருகே சாலையோரம் கார் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. சேலையூர் ரோந்து வாகன போலீசார் அங்கு சென்று பார்த்தபோது காருக்குள் கட்டைகள் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு நபர் காரை நிறுத்தி விட்டு செல்வது தெரிய வந்தது. விசாரணையில் அவர் மேடவாக்கத்தை சேர்ந்த ஷாஜகான் என்பது தெரிய வந்தது.