ஈரோடு: ஈரோடு மாநகரில் கொங்காலம்மன் கோயில் வீதி, ஜின்னா வீதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் தமிழர்களும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கொங்காலம்மன் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் பவன் ஸ்டேஷனரீஸ் என்ற கடையிலும், ஜின்னா வீதியில் உள்ள கிருஷ்ணா மெட்டல் கடைகள் உட்பட மூன்று கடைகளின் முன்பும் பிளக்ஸ் பேனர் தொங்க விடப்பட்டு இருந்தைத உரிமையாளர்கள் நேற்று காலை கண்டனர். தமிழில் எழுதப்பட்டு இருந்ததால் என்ன என்று புரியாமல் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, கடையை திறக்க முயன்றனர். ஆனால், கடையில் புதிதாக பூட்டுபோடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பிளக்ஸ் பேனர்களை எடுத்து பார்த்து, விவரத்தை கடை உரிமையாளர்களிடம் கூறினர். அதன்பிறகே வடமாநிலத்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போடும் போராட்டம் நடந்து இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.