மேட்டூர்: தமிழகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி பேசினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பொட்டனேரியில், பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது: பெண்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழகத்தை பாமக ஆளவேண்டும். அப்போதுதான் ஒரு பைசா கூட செலவு செய்யாமல், உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், செலவின்றி நல்ல மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும். பாமக ஆட்சிக்கு வந்தால், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அன்புமணி பேசினார்.