மெட்ரோ ரயில் நிலையங்களில் டெம்போ டிராவலர் சேவை விரிவாக்கம்: மெட்ரோ தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கீழ் 7 நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையும், 14 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையும் செயல்பட்டு வருகின்றது. இச்சேவையை மாதம் தோறும்  70 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஷேர் ஆட்டோ சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை கொண்டுவர மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.

அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. தற்போது சின்னமலை, விமானநிலையம், ஆலந்தூர் ஆகிய மூன்று நிலையங்களில் இச்சேவை செயல்பட்டு வருகிறது.  இந்தநிலையில், இச்சேவையை மேற்கொண்டு 5 நிலையங்களில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:  டெம்போ டிராவலர் சேவை  5 நிலையங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: