தென்காசி: தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மாசி மகப்பெருவிழா தேரோட்டம், நேற்று காலை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி தீபாராதனை, ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை கோலாகலமாக நடந்தது. சிவபூதகண வாத்தியங்கள் முழங்க முதலில் சுவாமி தேரும், பின்னர் அம்பாள் தேரும் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது. பூஜைகளை பட்டர்கள் செந்தில், முத்துகிருஷ்ணன், கைலாசம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, இன்ஸ்பெக்டர் ஆடிவேல், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், அதிமுக நகர செயலாளர் சுடலை, கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.