சங்கரன்கோவில் மார்ச் 5: 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜீ குருஜீ என்பவர் உலகத்தில் அமைதி நிலவ உலகம் முழுவதும் புத்த அமைதி கோபுரங்களை உருவாக்கி அமைதி ஏற்படுத்த முயன்றார். தாமரை சூத்திரத்தை புத்தர் முதன்முதலில் உபதேசம் செய்த பீகார் மாநிலம் ராஜ்கீர் மலையில், ஜவஹர்லால் நேரு உதவியுடன் புத்த அமைதி கோபுரத்தை அமைத்தார். தொடந்து 6 வடஇந்திய மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் தென்னிந்தியாவில் முதன் முதலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்திலும் புத்தர் அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதே கிராமத்தை சேர்ந்த முத்தையாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000ம் ஆண்டு புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் அமையப்பெற்ற இந்த இடத்தில் நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு, மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனிகள் சார்பில் கோயில் கட்டப்பட்டது.