மும்பை: மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் மாநில அரசிடம் இல்லை என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என பொருந்தாத கூட்டணி அமைந்துள்ளது. எதிர் எதிர் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளதால் அன்றாடம் அந்த அரசு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனை தொடர்ந்து, தேசியவாத காங்கிரசை சேர்ந்த சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நவாப் மாலிக், கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக கடந்த 28ம் தேதி மேலவையில் அறிவித்தார். ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு குறித்து விரைவில் சட்டம் நிறைவேற்றப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று நவாப் மாலிக் தெரிவித்தார்.