புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில், ஐநா மனித உரிமை ஆணையம், நீதிமன்றத்துக்கு உதவும் பணியில் தங்களையும் சேர்த்துக் கொள்ளக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முதலில் போராட்டம் நடந்தது. ஆனால், அங்கு போராட்டம் அடங்கிய நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்டம் பரவியது. டெல்லியில் இதுதொடர்பாக நடந்த போராட்டத்தின்போது, அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்தது. இதில் 46 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.