அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் அடிப்படை வசதி இல்லாததால் ராஜீவ்நகர் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கஞ்சநாயக்கன்பட்டி கிராமம். இங்குள்ள ராஜீவ் நகர் தெற்கு பகுதியில் பிள்ளையார்கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாரதி தெரு, கம்பன் தெரு, ராமசாமி தெரு, ஆவுடையம்மாள் தெரு, வடக்கு பகுதியில் மகாத்மாகாந்தி தெரு, பங்களா தெரு போன்ற தெருக்கள் உள்ளன. இந்த நகர் உருவாகி 25 வருடம் ஆகிறது. ஆனால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள வாறுகால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த வாறுகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. ஒரு சில பகுதியில் வாறுகால் அமைக்கப்படாததால் ரோட்டில் பள்ளம் தோண்டி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் பகிர்மான குழாய் சீராக அமைக்கப்படவில்லை. இதனால் ஒருசில வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதில்லை. இதனால் வீடுகளில் உள்ள போர்வெல் மூலம் வரக்கூடிய தண்ணீரை தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாக புலம்புகின்றனர்.