பியாங்யாங்: வடகொரியா அடுத்தடுத்து நடத்தியுள்ள 2 ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய போர் திறன் வாய்ந்த ஆயுத தயாரிப்பு குறித்து வடகொரிய அறிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டின் முதன் முறையாக ஏவுகணை சோதனையை செய்திருக்கிறது. நேற்று மாலை கிழக்கு கடற்கரை நகரமான வான்சனில் இருந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வடகொரியா, படங்கள் சிலவற்யையும் வெளியிட்டுள்ளது. இந்த சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டுள்ளார்.
முகமூடி அணிந்த அதிகாரிகளுடன் ராணுவ அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டுள்ளார். சோதிக்கப்பட்ட ஏவுகணையின் வகை, வரம்பு, தாக்குதல் எல்லை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. வடகொரியா, அணுகுண்டு சோதனைகள் நடத்தியதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கடந்த ஆண்டு, வடகொரியா அடுத்தடுத்து பல்வேறு ஆயுத தளவாடங்கள் சோதனை நடத்தியது.
2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதிக்கு பின்னர் வடகொரியா நடத்தியிருக்கும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் அணுஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே வடகொரியா 13 முறை ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.