ஈரோடு: ஈரோட்டில் குப்பைகளை எந்த இடத்திலும் எரிக்க கூடாது. மீறினால் 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநகர பகுதிகளில் குப்பைகள் சேருவதை குறைக்கும் வகையிலும், சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரிக்கப்பட்டு வருகிறது. வணிகர்களின் வசதிக்காக கடைகளில் சேரும் குப்பைகளை இரவு நேரங்களில் சேகரிக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.