டெல்லி: 370வது பிரிவு ரத்தை எதிர்த்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வேறு பெரிய அமர்வுக்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை எனவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது. 370வது பிரிவு ரத்துக்கு எதிராக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த சூழ்நிலையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த 370 வது சிறப்பு பிரிவு அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இந்த சிறப்பு பிரிவை ரத்து செய்வது தொடர்பாக கடந்த 2017 - 2018 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால் இந்த மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா? வேண்டாமா? என்ற பிரட்சனை எழுந்தது.